அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்படவுள்ள புதிய உடன்பாட்டில் லெபனானும் சேர்க்கப்பட வேண்டும் என்றும், தங்களின் ஆயுதங்களை மௌனிக்கக் கோருவது தங்களை முற்றிலும் அழிப்பதற்குச் சமம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், இந்த உடன்பாடு முழுமையான போ நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும், அதில் லெபனானும் ஒரு அங்கமாக இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் தனது தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில், இஸ்ரேலுடன் லெபனான் அரசு நேரடியாக நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அது இஸ்ரேலுக்கு மட்டுமே சாதகமாக முடியும் என்றும் அவர் லெபனான் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்கக் கோருவது நாட்டின் பாதுகாப்புத் திறனைப் பறித்து தங்களை முழுமையாக அழிக்கும் இஸ்ரேலின் சதித் திட்டம் என்றும், தங்களின் ஆயுதங்கள் என்பது லெபனானின் உள்நாட்டு விவகாரம் என்பதால் அதைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தங்களின் அமைப்பும் மக்களும் தற்போது ஒரு வாழ்வாதார அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒட்டுமொத்த உலகமே தங்களுக்கு எதிராகத் திரும்பினாலும் தாங்கள் ஒருபோதும் பணியப் போவதில்லை என்று முழங்கியுள்ளார்.
இந்த உரைக்குப் பிறகு, ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானை மீண்டும் பேரழிவிற்கும் குழப்பத்திற்கும் தள்ள முயல்வதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், லெபனானில் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருவதும், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜூன் தொடக்கத்தில் வாஷிங்டனில் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.








