வாஷிங்டன், பிப்ரவரி.05-
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை படுகொலை செய்யப் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவில், கடந்த 2024 நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ட்ரம்ப்பைக் கொலை செய்யப் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 59 வயதான ரயன் ரவுத் என்பவருக்கு நீதிமன்றம் அத்தண்டனையை விதித்துள்ளது.
குறித்த நபர் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் பாம் பீச் நகரில் அமைந்துள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கழகத்தில், டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்பை கொலை செய்யும் நோக்கில், அரை தானியங்கி துப்பாக்கியுடன் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக புதர்களுக்குள் மறைந்திருந்ததாக ரவுத் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பின்னர், அமெரிக்க ரகசிய சேவை (Secret Service) அதிகாரிகள் அவரை கண்டுபிடித்தனர்.
ஒரு மனித உயிரை பறிக்க முன்கூட்டியே திட்டமிட்டு, கணக்கிட்ட முறையில் நீங்கள் செயல்பட்டுள்ளீர்கள் என்பது எனக்கு தெளிவாக உள்ளது என இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கூறினார்.
விசாரணை காலத்தில், ரவுத் தனது வழக்கை தானே வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்குமாறு ரவுத் நீதிபதியிடம் கோரியிருந்தார்.
எனினும், அமெரிக்க ஜனநாயகத்தை கவிழ்க்கும் நோக்குடன் இந்த குற்றம் மேற்கொள்ளப்பட்டது எனக் கூறிய அரசு தரப்பு, ஆயுள் தண்டனையே பொருத்தமானது என வலியுறுத்தியது.
இந்த சம்பவம் கடந்த 2024 செப்டம்பர் 15ம் திகதி நிகழ்ந்தது.








