Apr 21, 2026
Thisaigal NewsYouTube
ஆசியக் கடற்பரப்பில் காலியாக வலம்வரும் கத்தார் சரக்குக் கப்பல்கள்: மத்திய கிழக்குப் போரால் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல்!
உலகச் செய்திகள்

ஆசியக் கடற்பரப்பில் காலியாக வலம்வரும் கத்தார் சரக்குக் கப்பல்கள்: மத்திய கிழக்குப் போரால் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல்!

Share:

கத்தாருக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சரக்குக் கப்பல்கள், ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் சரக்குகள் ஏதுமின்றி காலியாகச் சுற்றிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலைத் தொடர்ந்து, கத்தாரின் முக்கிய ஏற்றுமதி ஆலை மற்றும் உலக எரிசக்திப் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதன் விளைவாக, கத்தாரிலிருந்து எரிவாயுவை ஏற்றிச் செல்ல வேண்டிய கப்பல்கள் தற்போது எங்கும் செல்ல முடியாமல் ஆசியக் கடற்பரப்பில் முடங்கியுள்ளன.

புளூம்பர்க் மற்றும் கெப்லேர் தரவுகளின்படி, இந்தக் கப்பல்கள் மேற்கு இந்தியா, இலங்கை, மலாக்கா நீரிணை மற்றும் சிங்கப்பூருக்குக் கிழக்கே உள்ள நீர்ப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கப்பலில் கூட தற்போது எரிவாயு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசின் மூத்த அதிகாரி அன்வார் கார்கேஷ், ஹோர்முஸ் நீரிணை என்பது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் உயிர்நாடி என்று குறிப்பிட்டார். இதனை ஒரு போர் ஆயுதமாகவோ அல்லது பிணைக்கைதியாகவோ பயன்படுத்தக் கூடாது என்றும், இது சர்வதேசப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தத் தடையின் காரணமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 105 அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதே தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வாக அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் நீடித்தால், ஆசிய நாடுகளின் எரிசக்தித் தேவை மற்றும் மின்சாரக் கட்டணங்களில் பெரும் மாற்றம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related News