நைஜீரியா, பிப்ரவரி.16-
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர்.
சுமார் 41 மோட்டார் சைக்கிள்களில் வந்த இந்தக் கும்பல், தலா இரண்டு அல்லது மூன்று நபர்களுடன் துங்கா-மேகேரி, கொன்கோசோ மற்றும் பிசா ஆகிய மூன்று கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்தத் தாக்குதலில் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், அடையாளம் தெரியாத எண்ணிக்கையிலான மக்கள் கடத்தப்பட்டுள்ளனர். உயிருக்கு அஞ்சி மக்கள் அருகிலுள்ள புதர்களுக்குள் ஓடி ஒளிந்ததால், கடத்தப்பட்டவர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.
இந்தக் கும்பலின் நோக்கம் கொள்ளையடிப்பது அல்ல, மாறாக மக்களைக் கொன்று பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதே என்று உள்ளூர் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் ஜிஹாதி அமைப்புகளின் ஆதிக்கம் உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இரவு 8 மணிக்குப் பிறகு மோட்டார் சைக்கிள் டாக்ஸிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினரும் மீட்புப் பணிகளுக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.








