சிங்கப்பூர், மே.27-
சிங்கப்பூரில் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள வைர மோதிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
எஸ்.பி.எஸ் டிரான்சிட் (SBS Transit) நிறுவனத்தின் 54 வயது ஓட்டுநரான தியோ லாய் ஹுவாட், தனது பணி நேரத்தின் முடிவில் பேருந்தைச் சோதித்த போது இந்த மோதிரத்தைக் கண்டெடுத்தார். கடந்த மே 11 அன்று கிளாரிசா டான் (Clarissa Tan) என்ற பெண்மணி இப்பேருந்தில் பயணம் செய்த போது இந்த விலையுயர்ந்த மோதிரம் தவறி விழுந்துள்ளது.
மறுநாள் காலையில் மோதிரம் காணாமல் போனதை உணர்ந்து அவர் பதற்றமடைந்த நிலையில், ஓட்டுநர் தியோ அதனை ஏற்கனவே பத்திரமாகப் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்திருந்தார். மோதிரத்தைத் திரும்பப் பெற்ற கிளாரிசா, ஓட்டுநரின் இந்தச் செயலை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். ஓட்டுநர் தியோவின் இந்த நேர்மையைப் பாராட்டி அவருக்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்கப் போவதாகப் பேருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.








