தற்போதைய போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மத்தியிலும், தற்காப்பு நடவடிக்கையாக தென் ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற படகுகளைக் குறிவைத்து புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானியப் படைகளால் தங்களது படைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்நிறுத்தக் காலத்தில் அமெரிக்க இராணுவம் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வரும் அதே வேளையில், தங்களது படைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்முஸ் பகுதியில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தைக் கொண்ட தெற்குத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் அருகே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்த சூழலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய தாக்குதல்கள் தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.








