பேங்காக், பிப்ரவரி.03-
வியட்நாமிலிருந்து பேங்காக் சென்ற ஏர் ஏசியா விமானத்தில், கடந்த ஜனவரி 29-ம் தேதி போதையில் இருந்த பயணி ஒருவர் உள்ளாடையுடன் நின்று ரகளையில் ஈடுபட்டு சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார். விமான ஊழியர்களின் அறிவுறுத்தல்களை மீறிய அந்த நபர், விமானம் தரையிறங்கியதும் படிக்கட்டில் இருந்து குதித்து தப்பியோட முயன்று கீழே விழுந்து காயமடைந்தார்.
தப்பியோட முயன்ற அவரை விமான நிலையப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி, விமானப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் போது, அந்த நபர் ரஷ்ய மொழியில் கூச்சலிட்டபடி விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகவும், தான் குதிக்கப் போவதாகப் மிரட்டியதாகவும் சக பயணிகள் தெரிவித்தனர்.
இதனால் விமானத்திற்குள் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து, விமானி அவசர கால நிலையை அறிவித்து பேங்காக்கின் டான் மியூயெங் (Don Mueang) விமான நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் விமானத்தைத் தரையிறக்கினார். தற்போது அந்தப் பயணியின் மீது விமானப் பணியாளர்களின் உத்தரவுகளை மீறியது மற்றும் விமானப் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவித்தது போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் தாய்லாந்து அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.








