அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, இரு நாட்டு உயர்மட்டப் பிரதிநிதிகளும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு இன்று வருகை தந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய விசேட தூதுக்குழுவில், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களைப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் வரவேற்றார். மறுபுறம், ஈரானியத் தரப்பில் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் அடங்கிய குழுவினர் பாகிஸ்தான் வந்து சேர்ந்துள்ளனர்.
கடந்த வாரம் பாகிஸ்தான் முன்னெடுத்த முயற்சியால், ஈரான் போரில் இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் லெபனானில் நிலவும் மோதல்களை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஈரானியச் சொத்துகளை விடுவித்தல் மற்றும் தடைகளை நீக்குதல் போன்ற நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது. மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டப் பாகிஸ்தான் ஒரு முக்கியத் தூதுவராகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்த 'இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை' உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.








