வான்கூவர், பிப்ரவரி.12-
கனடாவில் பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜ் என்ற சிறிய நகரில் சுமார் 2,700 பேர் வசித்து வருகின்றனர். அங்குள்ள மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள்ளும் புகுந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டார். இந்த கோரத் தாக்குதலில் பள்ளி வளாகத்திற்குள் 8 பேர் பலியானார்கள். அருகிலுள்ள ஒரு வீட்டில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அந்த வீட்டில் இருந்த பெண்ணும் பலியானார். தாக்குதல் நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கொலையாளி உட்பட மொத்தம் 10 பேர் பலியான நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனடியாக மூடப்பட்டு, மக்கள் பாதுகாப்பு கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். சுமார் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. டம்ளர் ரிட்ஜில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் தான் மிகவும் மனமுடைந்ததாக கனடா பிரதமர் மார்க் கார்னி ஒரு சமூக ஊடகப் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.








