பெய்ஜிங்: கொரோனா பாதிப்பு இப்போது தான் முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதற்குள்ள சீன ஆய்வாளர்கள் மற்றொரு வகை வைரஸ் வைத்து ஆய்வுகளை ஆரம்பித்துவிட்டனர். அது குறித்து நாம் பார்க்கலாம்.
சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா, உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
அதன் பிறகு வேக்சின் தொடங்கி நாம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இப்போது கொரோனா கட்டுக்குள் வந்தது. இதற்கிடையே சீன ஆய்வாளர்கள் நடத்தும் மற்றொரு ஆய்வு குறித்து மற்றொரு பகீர் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ்: அதாவது சீன ஆய்வாளர்கள் GX_P2V என்ற ஒரு வகை பிறழ்வு கொரோனா வைரஸை உருவாக்கி வருகிறார்களாம். அது நேரடியாகச் சென்று மூளையைத் தாக்கும் ஆபத்து இருக்கிறதாகவும் எச்சரிக்கிறார்கள். இது அடுத்த கொரோனா அலையை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள். இந்த வகை கொரோனா வேரியண்ட் எலிகளை 100% வரை கொல்வதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சீன ராணுவத்திற்குச் சொந்தமான ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் கொரோனா வைரசை குளோனிங் செய்து, அதை எலிகளுக்குச் செலுத்தி உள்ளனர். இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்படும் அனைத்து எலிகளும் எட்டு நாட்களுக்குள் உயிரிழந்துவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது விரைவான மரணத்தை ஏற்படுத்தும் நிலையில், இது அடுத்த பெருந்தொற்றை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
எலிகள்: மனிதர்களிடம் காணப்படும் புரதத்தை எலிகள் வெளிப்படுத்தியதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை கொரோனா மக்களிடையே பரவினால் அது எப்படிச் செயல்படும் என்ற ஒரு யோசனையை இது ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த 'GX_P2V மனிதர்களுக்குள் பரவினால் எந்தளவுக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை இது காட்டுவதாக உள்ளது.