நெதர்லாந்து, ஏப்ரல்.05-
நெதர்லாந்து அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட 2,500 ஆண்டுகள் பழமையான ருமேனியாவின் பொற்கவசம் (Golden Helmet of Coțofenești) ஓராண்டுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் அசென் நகரில் உள்ள ட்ரெண்ட்ஸ் (Drents) அருங்காட்சியகத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பெரும் கொள்ளை அரங்கேறியது.
ருமேனியாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்திலிருந்து நெதர்லாந்து ட்ரெண்ட்ஸ் (Drents) அருங்காட்சியகத்துக்கு கண்காட்சிக்காகக் கொண்டு வரப்பட்டிருந்த கிமு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற 'கோடோபெனெஸ்டி' பொற்கவசம் மற்றும் மூன்று தங்கக் காப்புகளை மர்ம நபர்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தித் திருடிச் சென்றனர்.
சுமார் ஒரு கிலோ எடை கொண்ட இந்த அரிய வகை எலெக்ட்ரம் (தங்கம் மற்றும் வெள்ளி கலந்த உலோகம்) கவசம், ருமேனியாவின் கலாசார அடையாளமாகக் கருதப்படுகிறது.
இந்தத் திருட்டுச் சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஏப்ரல் 2 இந்த பொற்கவசம் மற்றும் திருடப்பட்ட மூன்று காப்புகளில் இரண்டு மீட்கப்பட்டதாக டச்சு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிடிபட்ட மூன்று சந்தேக நபர்களுடன் சட்டத்தரணிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சட்டப்பூர்வ உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.
கவசத்தில் சிறிய அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், அவை முழுமையாகச் சீரமைக்கப்படக் கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் விரைவில் ருமேனியாவிற்குத் திரும்பக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. காணாமல் போன மூன்றாவது தங்கக் காப்பைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.








