சிங்கப்பூர், பிப்ரவரி.19-
சிங்கப்பூரில் மதுபோதையில் முதியவரான டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய 36 வயது ஷாலினி தேவராஜன் என்பவருக்கு நீதிமன்றம் இன்று இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதித்தது.
கடநத் 2025-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி சிங்கப்பூர், Yishun பகுதியில் ஷாலினி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படட்து.
சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 3 மணியளவில் ஷாலினி, Yishun பகுதிக்குச் செல்வதற்காகப் பாதிக்கப்பட்ட முதியவரின் டாக்சியில் ஏறியுள்ளார். அவர் மது அருந்தியிருந்தது ஓட்டுநருக்குத் தெரிந்ததுடன், பயணத்தின் போது அவர் தூங்கியும் போனார்.
இலக்கை அடைந்ததும், பயணக் கட்டணமான 24 டாலர் செலுத்துமாறு ஓட்டுநர் கேட்டுள்ளார். ஆனால், தன்னிடம் ரொக்கமோ அல்லது மின்னணு முறையில் பணம் செலுத்த வழியோ இல்லை என்று ஷாலினி கூறியுள்ளார்.
தனது வீட்டிற்குச் சென்று பணம் எடுத்து வருவதாகக் கூறிய அவரை, ஓட்டுநர் தனது கைபேசியை அங்கேயே வைத்து விட்டுச் செல்லுமாறு அல்லது தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். ஆனால் ஷாலினி இரண்டிற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஷாலினி, தன்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஓட்டுநருக்கு சவால் விடுத்தார். ஈஷூன் போலீஸ் நிலையத்திற்கு வெளியே வந்ததும், ஓட்டுநரை மிகக் கேவலமாகப் பேசிய ஷாலினி, அவரது இடது கன்னத்தில் பலமாக அறைந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஓட்டுநர் மிகவும் பொறுமையாகவும் தொழில்முறைப் பண்புடனும் நடந்து கொண்டார் என்றும், ஷாலினியின் தாக்குதல் எந்தத் தூண்டுதலும் இல்லாமல் நடந்த ஒன்று என்றும் சுட்டிக் காட்டினார்.
ஷாலினி தனது தவற்றை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.








