லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. விபத்து நடந்த சமயத்தில் சுரங்கத்திற்குள் 247 தொழிலாளர்கள் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், நச்சுத்தன்மை வாய்ந்த கார்பன் மோனாக்சைடு வாயுவின் அளவு விபரீதமாக அதிகரித்ததால் மீட்புப் பணியில் பெரும் சவால் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சுமார் 870 மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த கோர விபத்து குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதிபர் ஷி ஜின்பிங், காயமடைந்தவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட சுரங்க நிறுவனத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான தொழில்துறை விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.








