சிங்கப்பூர், பிப்ரவரி.12-
சிங்கப்பூருக்குள் 52.77 கிராம் டயாமார்பின் போதைப் பொருளைக் கடத்திய குற்றத்திற்காக 33 வயது ஒரு மலேசியரான ஆர். லிங்கேஸ்வரனுக்கு நேற்று புதன்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி லிங்கேஸ்வரன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூர் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 15 கிராமுக்கு அதிகமான டயாமார்பின் கடத்தினால் மரண தண்டனை கட்டாயமாகும்.
இந்நிலையில் பொது மன்னிப்புக் கோரி சிங்கப்பூர் அதிபரிடம், லிங்கேஸ்வரன் முன்வைத்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கான தூக்குத் தண்டனை, நேற்று வைகறை நேரத்தில் நிறைவேற்றப்பட்டதாக சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் தடுப்புக் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனக்கு எதிரான தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கக் கோரி, சில நாட்களுக்கு முன்பு, லிங்கேஸ்வரன் செய்து கொண்ட வழக்கு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப லிங்கேஸ்வரனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தில், சட்டப்படி நிலுவையில் வேறு எந்தத் தடைகளும் இல்லாததால் நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று மத்திய போதைப் பொருள் தடுப்புக் பிரிவு தெரிவித்தது.
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மூன்றாவது மலேசியர் லிங்கேஸ்வரன் ஆவார். இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கே. தட்சணாமூர்த்தி மற்றும் கடந்த அக்டோபர் மாதம் பி. பன்னீர் செல்வம் ஆகியோருக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சிங்கப்பூர் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு காத்திருக்கும் மற்றொரு மலேசியர் எஸ். சாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.








