பேங்காக், பிப்ரவரி.25-
தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 72 புலிகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'Canine distemper' எனும் மிக வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்று காரணமாக புலிகள் இறந்துள்ளதை கால்நடை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக நாய்கள் மத்தியில் காணப்படும் இந்த வைரஸானது, புலிகளின் சுவாசப்பை, வயிறு மற்றும் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை தாங்கள் கண்டறிந்த போது நிலைமை கையை மீறிச் சென்றிருந்ததாகவும், பூனைகள் அல்லது நாய்களைப் போல், புலிகளின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் கடினமானது என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சுமார் 240-க்கும் மேற்பட்ட புலிகளைக் கொண்டிருந்த அந்த பூங்காவானது, இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.








