சனா: இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஈரான், ஹவுதியுடன் கைகோர்த்து செங்கடல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இந்நிலையில், ஹவுதிக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கூட்டாக தொடங்கியுள்ளது.
பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸூக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை களத்தில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக செங்கடலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழியாக பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களை தாக்கி கைப்பற்றுவோம் என்று கூறியிருந்தது. இதன்படி சில கப்பல்களையும் கைப்பற்றியிருந்தது. இந்த செங்கடல் பகுதி வழியாக ஆசிய - ஐரோப்பியத்தின் 12% வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே இதை ஆக்கிரமிப்பது வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.
இந்தியாவிலிருந்து சென்ற கப்பல்களையும் ஹவுதி படையினர் சிறைபிடிக்க முயன்றனர். இதுவரை 27 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஹவுதி படையினருக்கு எதிரான கூட்டு தாக்குதல்களை அமெரிக்காவும், பிரிட்டனும் தொடங்கியுள்ளன. ஏமன் தலைநகர் சானா, சாதா மற்றும் தாமர் உள்ளிட்ட நகரங்களில் இந்த படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இது, 'அமெரிக்க-சியோனிஸ்ட்-பிரிட்டிஷ்' ஆக்கிரமிப்பு என ஹவுதி கிளரச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. 10க்கும் அதிகமாக இலக்குகளை அமெரிக்க-பிரிட்டன் கூட்ட படைகள் குறி வைத்திருக்கின்றன. இந்த தாக்குதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு நாங்கள் எந்த அளவுக்கு பதிலடி கொடுப்போம் என்பதற்கு இந்த தாக்குதல்கள் ஓர் எடுத்துக்காட்டு. எங்கள் மீதான தாக்குதல் முயற்சிகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்.