தென்கொரியாவின் டேஜோன் வட்டாரத்தில் உள்ள 'ஓ-வேர்ல்ட்' விலங்குத் தோட்டத்திலிருந்து ஓநாய் ஒன்று தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்று பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை காலை, 2024-ஆம் ஆண்டு பிறந்த சுமார் 30 கிலோ எடையுள்ள ஆண் ஓநாய் ஒன்று, தான் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் அடியில் குழியைத் தோண்டி, வேலியைச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றது. இந்த ஓநாய் 'சான்சியோங்' தொடக்கப்பள்ளிக்கு அருகிலுள்ள சாலையில் நடமாடுவதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
ஓநாயைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டைக்காக ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகத் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சான்சியோங் தொடக்கப்பள்ளியைத் தற்காலிகமாக மூட டேஜோன் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஓநாய் இன்னும் பிடிபடாத நிலையில், அந்த வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








