கொல்கட்டா, டிசம்பர்.14-
கொல்கட்டாவில் மெஸ்ஸி நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்ட சம்பவத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரை 14 நாட்கள் காவலில் வைக்கவும் உத்தரவிட்டது.
பிரபல அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, நேற்று கொல்கட்டா வந்தார். சால்ட் லேக் மைதானத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என பலரும் மெஸ்ஸியைச் சுற்றி இருந்தனர்.
இதனால் ரசிகர்களால் மெஸ்ஸியைக் காண முடியாத சூழல் நிலவ, அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் ரசிகர்கள் வன்முறையில் இறங்கி மைதானத்தையே சூறையாடினர். இதனால் அங்கிருந்து உடனடியாக மெஸ்சி சென்று விட, ரசிகர்களின் செயலுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.
இதையடுத்து, மெஸ்ஸியின் இந்தியப் பயண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை கொல்கட்டா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அவரது சார்பில் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் போலீசாரும் 14 நாட்கள் காவல் கோரி, மனு செய்தனர். தத்தா மீது வேண்டும் என்றே குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாகவும், அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது.
மெஸ்ஸிக்கு அருகில் யாரை அனுமதிப்பது, அனுமதிக்காதது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் பொறுப்பு என்று போலீசார் பதிலுக்கு வாதிட்டனர். இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தத்தாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.








