கோலாலம்பூர், பிப்ரவரி.02-
அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய நிதியாளர் Jeffrey Epstein வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட சமீபத்திய கோப்புகளின் தொகுப்பில் இடம்பெற்ற ஒரு மின்னஞ்சலில், தனது பெயர் தோன்றியிருப்பதை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
இது குறித்து நேற்று தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அன்வார், Epstein வழக்குடன் தொடர்புடைய ஒரு மின்னஞ்சலில், தனது பெயரைக் குறிப்பிட்டுள்ள சில தரப்பினர், தன்னை சந்திக்க விரும்பியுள்ளதை இன்று தான் அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் 10 ஆண்டுகளுக்கு முந்தையவை எனக் குறிப்பிட்டுள்ள அன்வார், அந்த மின்னஞ்சல்களைப் பரிமாறிக் கொண்ட எந்தத் தரப்பினருடனும், குறிப்பாக Epstein-னுடன் தனக்கு சிறிதும் தொடர்பு இல்லை என்றும் விவரித்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 21 தேதியிட்ட அந்த மின்னஞ்சலில், Epstein தரப்பைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அமெரிக்க வங்கியான JP Morgan-இன் அப்போதைய தலைமைச் செயலதிகாரியான Jes Staley-க்கும், அன்வாருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே வேளையில், அந்த மின்னஞ்சலுக்குப் பதிலளித்துள்ள Epstein, மே மாதம் அன்வாரை அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிற்கு அழைப்பது குறித்து பரிந்துரைத்துள்ளார்.
இந்த மின்னஞ்சலானது தற்போது சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அன்வார் அதற்கு மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.








