உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்குத் திறந்துவிட ஈரான் நாட்டுக்கு விதித்திருந்த காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேலும் ஒரு நாள் நீட்டித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 5 அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்திருந்தார். தற்போது அந்தக் காலக்கெடு ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, சிங்கப்பூர் நேரப்படி எதிர்வரும் புதன்கிழமை ஏப்ரல் 8 காலை 8 மணியுடன் முடிகிறது. அதற்குள்ளாக ஈரான் ஏதேனும் ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நீரிணையைத் திறக்கத் தவறினால், ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது மிகவும் கடுமையான மற்றும் பயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். "ஈரான் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் விளைவுகள் கடுமையாக இருக்கும்" என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பகுதி இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இது மூடப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சிங்கப்பூரிலும் இதன் தாக்கங்களை ஆராய அமைச்சர் கா. சண்முகம் தலைமையிலான அமைச்சர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், 46,650 மெட்ரிக் டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிச் சென்ற இந்தியக் கப்பல் ஒன்று, ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த அடுத்தகட்ட நகர்வு உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.








