நோம் பென், மார்ச்.22-
கம்போடியாவில் 1,000 ஆண்டுகள் பழமையான “நடனமாடும் சிவன்” சிலை, பல தசாப்தங்களுக்கு முன்பு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்த நிலையில் கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது, அந்தச் சிலையானது வெற்றிகரமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கலாச்சார அமைச்சு அறிவித்துள்ளது.
5 மீட்டர் உயரமும், சுமார் 7 டன் எடையும் கொண்ட இந்த மணற்கல் சிலையானது, 10 கைகள் மற்றும் 5 முகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இது 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், Khmer பேரரசின் பழமையான தலைநகரான Koh Ker பகுதியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
வட கம்போடியாவில் அமைந்துள்ள Koh Ker கோவில் சிதிலங்கள், கடந்த 2023-ஆம் ஆண்டு UNESCO-வின் சர்வதேச பாரம்பரியக் களப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
முழுமையாக புதுப்பிக்கப்பட்ட இந்த “நடனமாடும் சிவன்” சிலையானது, மீண்டும் பிறந்ததாகக் கருதப்பட்டு, கடந்த மார்ச் 18-ஆம் தேதி, Siem Reap நகரிலுள்ள, அங்கோர் பாதுகாப்பு மையத்தில், மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நகரம் உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் மரபுத்தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.








