புதுடில்லி, பிப்ரவரி.05-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் சனிக்கிழமை முதல் மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்கிறார்.
மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தப் பயணத்தின் போது, இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கியப் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
இது பிரதமர் மோடியின் மூன்றாவது மலேசியப் பயணமாகும். 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 'விரிவான வியூக கூட்டாண்மை' நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது, 10-ஆவது இந்தியா-மலேசியா CEO மன்றக் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினர், தொழில்துறையினர் மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார். பிப்ரவரி 7-ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில் MINES அனைத்துலக கண்காட்சி மையத்தில் பிரம்மாண்ட சமூக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவுள்ளது.








