அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள வின்ஸ்டன்-சேலம் பகுதியில் அமைந்திருக்கும் லெயின்பாக் சமூகப் பூங்காவில், பதின்ம வயதினர் இருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 10 மணி அளவில், பள்ளி ஒன்றுக்கு அருகிலுள்ள அந்தப் பூங்காவில் இளையர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையே இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கு மூலக் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 17 வயதுடைய எருபே ரொமேரோ மெடினா மற்றும் 16 வயதுடைய டேனியல் ஜிமெனெஸ் மில்லியன் ஆகிய இரு இளையர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இச்சண்டையில் 14 முதல் 19 வயதுக்குட்பட்ட மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சண்டையானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடந்ததாகத் தெரிவித்துள்ள காவல் துறைத் தலைவர் வில்லியம் எச். பென் ஜூனியர், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் சமூக ஊடகங்கள் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கவலை தெரிவித்துள்ளார். தற்போது வரை இச்சம்பவம் தொடர்பாகச் சந்தேகப்படும் நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.








