வாஷிங்டன், ஏப்ரல்.26-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அங்கு திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது. பலத்த சத்தம் கேட்டவுடன் அங்கிருந்த விருந்தினர்கள் பீதியடைந்து மேசைகளுக்கு அடியில் தஞ்சமடைந்த நிலையில், ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் உடனடியாக டொனால்ட் டிரம்பை மேடையிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுடப்பட்ட போதிலும், அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத அங்கியால் உயிர் தப்பியதாக அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
பாதுகாப்புச் சோதனைகளை மீறி உள்ளே நுழைந்த சந்தேக நபர் ஒருவரை அமெரிக்க இரகசிய சேவை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஹோட்டலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டதுடன், ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் தனித்துச் செயல்பட்டது தெரிய வந்துள்ளதாகவும், இதற்கும் ஈரான் நாட்டுடனான போர் மோதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் டிரம்ப் தனது Truth Social தளத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.








