தென்கொரியாவின் வடக்கு சுங்சியோங் மாகாணத்தில் உள்ள சீனோன்ஜு நகரில், இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
சீனோன்ஜு நகரின் போங்ம்யோங்-டாங் பகுதியில் உள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டடத்தின் முதல் தளத்தில் அமைந்திருந்த உணவகத்தில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. எரிவாயுக் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். விபத்து நடந்த நேரத்தில் உணவகம் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
இந்த வெடிப்பின் தாக்கத்தால் அருகில் இருந்த குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதில் தூங்கிக் கொண்டிருந்த 8 குடியிருப்பாளர்கள் கண்ணாடித் துண்டுகள் குத்தியதில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 7 பேருக்குச் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. வெடிப்பின் அதிர்வால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கவிழ்ந்தன. 105 வீடுகள், 16 வணிக நிறுவனங்கள் மற்றும் 91 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்புத் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இணைந்து விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.








