கேப்டவுன், டிசம்பர்.06-
தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
பிரிட்டோரியா நகருக்கு அருகில் சவுல்ஸ் வில்லே டிவுன்ஷிப் பகுதியில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதி உரிய முறையில் உரிமம் பெறப்படவில்லை.
இந்த விடுதிக்குள் அடையாளம் தெரியாத 3 பேர் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு எப்போதும் போல் பலர் அமர்ந்து, மதுபானம் அருந்திக் கொண்டு இருந்தனர். யாரும் எதிர்பாராத தருணத்தில் இந்த 3 பேரும் அங்குள்ளோர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள். மொத்தம் 14 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்தை அறிந்த உள்ளூர் போலீசார், உடனடியாக அங்கு விரைந்தனர். சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.
எதற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதற்கான போதிய காரணங்களை வெளியிட போலீசார் மறுத்துள்ளனர்.








