ஷாஹ் அலாம், ஏப்ரல் 30-
சிலாங்கூர், ஷாஹ் அலாம், செக்சியன் 23 -யில் உள்ள ஒரு பேரங்காடியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கைப்பையை திருடிய சம்பவ தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி 10.57 மணியளவில் பாதிக்கப்பட்ட 37 வயதுடைய அப்பெண் காவல்நிலையத்தில் இதுக்குறித்து புகார் அளித்திருப்பதாக ஷா அலாம் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் பேரங்காடியினுள் உள்ள ஒரு கழிவறைக்கு சென்றிருந்த போது 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைப்பையை திருடி ஓடியதாகவும் அவரை பிடிப்பதற்கு அப்பெண் எச்சரிக்கை ஒலியை எழுப்பி பொதுமக்களிடம் உதவி கேட்டதாகவும் முகமது இக்பால் கூறினார்.
கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்த வேளை, இன்று தொடங்கி மே 2 ஆம் தேதி வரையில் மூன்று நாட்களுக்கு அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முகமது இக்பால் விளக்கினார்.








