நாட்டில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் ரோஹிஞ்யா அகதிகள் மீது போலீஸ், குடிவரவுத்துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்றம் ஆகியவை இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. அலுவலகத்தின் அருகே நூற்றுக்கணக்கான ரோஹிஞ்யாக்கள் சட்டவிரோதமாகக் கூடி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது குறித்துப் பேசிய அவர், "மலேசியாவிற்கு என்று சட்டதிட்டங்கள் உள்ளன; அகதிகள் எங்கு வேண்டுமானாலும் தங்களின் இஷ்டப்படி குடியேற முடியாது" என்று மிக அழுத்தமாகக் கூறினார்.
மேலும், முறையான ஆவணங்கள் இல்லாதவர்களைக் குடிநுழைவுத்துறை தடுப்புக் காவலில் வைக்கவும், ஆவணங்கள் உள்ளவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறு எச்சரிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.








