தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி, அவரை விடுவிக்க 8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகையைக் கோரியதாக 6 ஆடவர்கள் இன்று பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டனர்.
45 வயது ஏ. ரவிச்சந்திரன், 45 வயது ஆர். இளங்கோவன், 43 வயது எம். ஜெயராஜ், 40 வயது மோசஸ் டி பிரெட்டோ ஜான் பேட்ரிக், 33 வயது சியாவுதீன் மற்றும் 36 வயது முகமது அஃபிக் சஃபின், ஆகிய அந்த அறுவருக்கு எதிராக இந்த கடத்தல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி, டத்தாரான் சன்வேயிலுள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்தில் 44 வயது சுய் கோக் மூன், என்ற தொழிலதிபரை 8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு கடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குறறிவியல் சட்டத்தின் கீழ் இந்த அறுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
அறுவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய வேளையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி டாக்டர் ஷஹ்லிசா வர்நோ , வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, கடத்தப்பட்ட தொழிலதிபர் ஜூலை 18 அன்று ஷா ஆலமில் உள்ள ஒரு குடியிருப்பில் நள்ளிரவு 1 மணியளவில் போலீசாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








