புகழ்பெற்ற கத்தோலிக்க புனிதத் தலங்களில் ஒன்றான பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா நேற்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டு முக்கியத் திருவிழா வார இறுதியில் அமைந்ததால், மலேசியா, சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பேராலயத்தில் திரண்டனர்.

10 நாட்கள் நடைபெற்ற நவநாள் திருப்பலிகளைத் தொடர்ந்து, நேற்று காலையில் நான்கு மொழிகளில் சிறப்புத் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இதில் காலை 11 மணிக்கு நடைபெற்ற தமிழ் மொழித் திருப்பலியில் மட்டும் 10,000-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 8.30 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி புனிதரின் திருவுருவப் பவனியில் பங்கேற்றனர்.

நம்பிக்கையின் சிந்தைனைகளால் இணைந்து கொண்டாடுவோம், கேட்போம், நடப்போம்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இத்திருவிழா குறித்து அருள்பணியாளர் லாசரஸ் ஜொனாதன் கூறுகையில், "அனைத்து பக்தர்களும் பாதுகாப்பாக வந்து, இறையருளுடன் நலமாகத் தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை.

இனம், மதம் என்ற வேறுபாடின்றி அனைவருடனும் இணைந்து பயணிப்பதும், மக்களின் துயரங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதுமே திருச்சபையின் நோக்கம். இந்த ஆண்டு சிறப்புப் பிரார்த்தனைகள் கிறிஸ்துவ மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது; ஏனெனில் நம்பிக்கை என்பது அனைவருக்கும் பொதுவான செய்தி" என்றார். மேலும், குடும்ப ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், "குடும்பங்கள் வலுவாக இருந்தால் நாடு நிலைத்திருக்கும்; உலகமும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறும்" என்று தனது செய்தியில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.










