இஸ்கந்தர் புத்திரி மாநகர் மன்ற பகுதியில் இயங்கி வந்த நெட்வொர்க் ஸ்கூல் நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை அந்த நிறுவனத்திடமிருந்து எந்தவித மேல்முறையீடும் வரவில்லை என மாநில வீடமைப்பு மற்றும் ஊராட்சி சங்கத் தலைவர் டத்தோ முகம்மது ஜப்னி முகம்மது சுகூர் தெரிவித்துள்ளார்.
குலாய், பந்தர் புத்ரா அரங்கில் நடைபெற்ற டிவெட் மற்றும் குலாய் மாநகர் மன்ற தொழில் கண்காட்சியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் குறிப்பிட்டார். உரிம நிபந்தனைகளை மீறியதால் அந்த நிறுவனத்தின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த நிறுவனம் சட்டவிரோதமாக இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
விளம்பரப் பலகைகளில் நிபந்தனைகளைப் பின்பற்றாதது மற்றும் தாங்கள் கோரிய உரிமத்திற்கு மாறாக வேறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஆகிய இரண்டு முக்கிய விதிகளை இந்நிறுவனம் மீறியுள்ளதாக இஸ்கந்தர் புத்திரி மாநகர் மன்றம் கண்டறிந்துள்ளது. புதிய முதலீடுகளை மாநில அரசு எப்போதும் வரவேற்கும் அதேவேளையில், சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.








