கூலிம், பாடாங் செராய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இதில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நோன்புப் பெருநாளன்று இரவு 11.50 மணியளவில், தொழிற்சாலை ஊழியரான அந்த இளைஞர் தனது தாயார் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று கூலிம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் DSP தெங்கு முகமது பைசல் தெங்கு எங் தெரிவித்தார்.
42 வயதுடைய சந்தேக நபர், அந்த இளைஞரைத் தொலைபேசியில் அழைத்து வரவழைத்துள்ளார். வீட்டின் முன்புறம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மோதலாக மாறியதில், சந்தேக நபர் தனது துப்பாக்கியால் அந்த இளைஞரைச் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் உடனடியாக கூலிம் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, தோட்டாக்கள் உடலில் ஆழமாக துளைக்கவில்லை என்பதால் அவர் உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு ரிவால்வர் துப்பாக்கி, 12 தோட்டாக்கள், ஹோண்டா சிவிக் கார் மற்றும் சந்தேக நபரின் ஆடைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கைதான சந்தேக நபர் மீது ஏற்கனவே 13 குற்றவியல் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் இருப்பதும், காயமடைந்த இளைஞர் மீது 12 போலீஸ் பதிவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது என்று DSP தெங்கு முகமது பைசல் மேலும் கூறினார்.








