ஆரோக்கியமான மற்றும் நாகரிகமான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், பிறரைத் தரக்குறைவாகப் பேசவோ அல்லது அவதூறு பரப்பவோ கூடாது என்றும் பாரிசான் நேஷனல் தேர்தல் பிரிவினருக்கு அதன் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காதிர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில், தேவையற்ற அரசியல் சண்டைகளில் ஈடுபடாமல், கட்சியின் கொள்கைகளையும் கடந்த காலச் சாதனைகளையும் மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மத்திய அரசு அளவில் 'ஒற்றுமை அரசாங்கத்தில்' தங்களோடு இருக்கும் மற்ற கட்சிகளுக்கு எதிராக இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழல் வந்தாலும், கண்ணியக் குறைவாக நடக்கக் கூடாது என்பதில் பாரிசான் நேஷனல் கூட்டணி உறுதியாக உள்ளதாக ஜம்ப்ரி அப்துல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்








