தீவைப்பு மற்றும் சிவப்பு சாயம் ஊற்றி பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாக கணவன்-மனைவி இருவரும் இன்று ஈப்போவில் உள்ள மூன்று வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.
கடந்த ஜூன் 4-ஆம் தேதி தாமான் தெமாரா பகுதியில் உள்ள ஒருவரது சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகத் தொடரப்பட்ட புதிய வழக்கில் கணவன் தினகரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறற் இவ்வழக்கில் தினகரனுக்கு 2,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதே வேளையில், இதே வழக்கில் கூட்டுச் சதிகாரராகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவரது மனைவி ரத்னேஸ்வரி தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
இதையடுத்து, ரத்னேஸ்வரிக்கு 1,500 ரிங்கிட் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அவரது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூன் 12-ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் மகிழம்பூ பெஸ்தாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவாயிலுக்கு தீ வைத்து சேதப்படுத்தியதாக பிரிவு 435-இன் கீழும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.








