பேராக் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற இந்தியக் கிராமங்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரிங்கிட் நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் வெளியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், கம்போங் ஹெண்ட்ரா மற்றும் கம்போங் செங்காய் ஆகிய கிராமங்களுக்கு 4,30,000 ரிங்கிட்டும், கம்போங் கிண்டாவேலி 5,00,000 ரிங்கிட்டும், கம்போங் சுன்லி கிராமத்திற்கு 5,55,000 ரிங்கிட்டும் செலவிடப்பட்டுள்ளது. மேலும், கம்போங் சம்பந்தன் மற்றும் கம்போங் புண்டூட்டிற்கு மிக அதிகமாக 1.83 மில்லியன் ரிங்கிட்டும், கம்போங் காமாட்சி மற்றும் கம்போங் சுங்கை சுமுனிற்கு 4,85,000 ரிங்கிட்டும் மதிப்பிலான உள்கட்டமைப்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்துடன் இந்த மேம்பாட்டுப் பணிகள் நின்றுவிடாது எனக் குறிப்பிட்ட டத்தோ அ. சிவநேசன், அடுத்தடுத்த கட்டங்களில் இக்கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய சாலைகள், வடிகால் கால்வாய்கள், முறையான குடிநீர் விநியோகம் ஆகியவற்றுடன் உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த நவீன டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டங்களும் தடையின்றிச் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.








