பெர்கேசோ அமைப்பால் அமல்படுத்தப்பட்டுள்ள 'லிண்டுங் 24 ஜாம்' 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யவோ அல்லது பின்வாங்கவோ கூடாது என்று மலேசிய யுனி தொழிலாளர் மையம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதன் தலைவர் டத்தோ முகமது ஷாஃபி பிபி மம்மல், சமூக ஊடகங்களில் ஒரு சிலர் பரப்பும் தவறான விவாதங்களுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணிந்து தொழிலாளர்களின் பாதுகாப்பில் அரசாங்கம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
முன்பெல்லாம் வேலை நேரம் தவிர்ந்த மற்ற நேரங்களில் ஏற்படும் விபத்துகளுக்குத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் பெரும் சிரமம் இருந்தது. ஆனால், இந்த 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் அந்தப் பெரிய இடைவெளியைக் குறைத்து, தொழிலாளர்களின் குடும்பங்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நிறுவனங்கள் வழங்கும் குழு காப்புறுதிகள் வெறும் கூடுதல் சலுகை மட்டுமே என்றும், பெர்கேசோவின் இந்தத் திட்டம் அனைத்துத் தொழிலாளர்களுக்குமான அடிப்படை உரிமை என்றும் குறிப்பிட்ட டத்தோ முகமட் ஷாபி , தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது சமூக ஊடகங்களின் பிரபலத்திற்கான விஷயம் அல்ல, அது நாட்டின் கடமை என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.








