ஈப்போ, குனோங் பத்து புத்தே பகுதியில் மாயமான பெண் மலையேற்ற வீரர் ஜஸ்லிந்தா தேடப்பட்டு வரும் வேளையில், இந்தச் சம்பவத்திற்காக வனத்துறை மலை வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என அவருடன் சென்று மீட்கப்பட்ட முகமது ஹனாபி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மே 23 ஆம் தேதி 14 பேர் கொண்ட குழுவினர் இப்பயணத்தைத் தொடங்கினர். வழியில் ஹனாபிக்கு நெஞ்சுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால், அவரும், ஜஸ்லிந்தாவும், வழிகாட்டியான அபிஸ் என்பவரும் ஒரு முகாமில் தங்க நேரிட்டது. அவசர உதவிக்காகத் தொலைத்தொடர்பு சிக்னல் தேடி வழிகாட்டி அபிஸ் மலை உச்சிக்குச் சென்றபோது, ஜஸ்லிந்தாவை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், ஜஸ்லிந்தா அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
மோசமான வானிலைக்கு மத்தியிலும், வழிகாட்டி அபிஸ் தங்களைக் காப்பாற்றத் தொடர்ந்து போராடினார் என்றும், எனவே இதில் வழிகாட்டிகளின் தவறு ஏதுமில்லை என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹனாபி தெரிவித்துள்ளார்.








