தனியார் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' முறையைச் செயல்படுத்துமாறு அரசாங்கம் அறிவுறுத்த மட்டுமே முடியும் என்றும், அதை கட்டாயப்படுத்த முடியாது என்றும் மனிதவள அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஊழியர்களுக்கு நெகிழ்வான வேலை ஏற்பாடுகளை வழங்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், தனியார் நிறுவனங்களின் உற்பத்தித் தேவைகளை அவர்களே நன்கு அறிவார்கள் என்பதால், அரசாங்கம் அதில் தலையிட முடியாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
வரவிருக்கும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளவும், தொழில்துறையையும் ஊழியர்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் தேவையான முன்னெச்சரிக்கை உத்திகளை உருவாக்கி வருவதாகவும் டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.








