ஹஜ்ஜுப் பெருநாளின் போது, பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா, மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மந்திரி பெசாரின் இந்த செயலுக்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் இன்று மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதியே ஆக்ரோஷமாக இருந்த மாட்டைச் சுட்டதாக மந்திரி பெசார் கூறியுள்ள நிலையில், வைரலான வீடியோவில் மாடு அமைதியாக நிற்பதே தெளிவாகத் தெரிகிறது என்று ராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமய வழிபாட்டு நிகழ்விற்கு மந்திரி பெசார் ஏன் துப்பாக்கியைக் கொண்டு வந்தார், பொது இடத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்துவது 1960 ஆம் ஆண்டு துப்பாக்சிச் சட்டத்தின் கீழ் கடும் குற்றம் இல்லையா என்று ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மந்திரி பெசார் என்பதால் அவரை போலீஸ் துறை இன்னும் கைது செய்யவில்லையா? என்று சாடியுள்ள ராயர், சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் உடனடியாக அவர் மீது போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








