மலேசியாவின் எதிர்காலமானது, பொருளாதார வலிமை, தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்லாது, நாட்டின் மனிதவளத்தின் தரத்தையே பெரிதும் சார்ந்துள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடிலா யுசோஃப் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற அட்னி அனைத்துலக மாணவர் மாநாடு 2026 விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றிய அவர், வேகமாக மாறிவரும் உலகில், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், திறம்பட தொடர்புகொள்ளும் திறன் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மனித வளமே நாட்டிற்கு அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், காலநிலை மாற்றம், பொது சுகாதாரம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு போன்ற எதிர்கால சவால்களை தனித்தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதையும் பாடிலா யுசோஃப் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், தனியார் துறை, சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் இணைந்து செயல்பட்டால் தான் அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








