எதிர்வரும் தேர்தல்களில் மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறிய கருத்திற்கு, சரவாக் மாநில தலைவர்களில் ஒருவரான அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பார்த்தி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவரான அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை வழிநடத்திய மகாதீர், பல்லின மக்கள் ஒன்றிணைந்து வாழும் மலேசியாவின் சமூக அமைப்பை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மகாதீர் கூறிய கருத்து, மலேசிய மக்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறிப்பாக மகாதீர் போன்ற மூத்த தலைவரிடமிருந்து இப்படிப்பட்ட கருத்துகள் வருவது மிகவும் பொறுப்பற்ற செயல் என்றும் கரீம் ரஹ்மான் ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இனம் மற்றும் மதவாத அரசியலைத் தவிர்த்தால் தான் நல்லிணக்கம், அமைதி, வளம் மற்றும் முன்னேற்றம் கொண்ட மலேசியாவை உருவாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








