மலாக்காவில் நேற்று மாலை நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியின் போது, மின்னல் தாக்கியதில் விளையாட்டாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், போட்டி நடுவரும் காயமடைந்தார்.
உயிரிழந்தவர் 28 வயதான ஆர். தணேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மாலை சுமார் 5.40 மணியளவில் 'லெண்டு ராகன் மூடா வளாகம்' கால்பந்து மைதானத்தில் இந்தச் சம்பவமானது நிகழ்ந்ததாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
ரெம்பாவ் இந்தியன் வெட்டரன் எஃப்சி மற்றும் தஞ்சோங் மின்யாக் எஃப்சி அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி தொடங்கி சுமார் 10 நிமிடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கிய நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இடி முழங்கிய உடனேயே வீரர் ஆர். தணேஷ் மற்றும் மேலும் இருவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்ததை அவரது சக வீரர்கள் கண்டதாகவும் அஹ்மத் அபு பக்கர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








