இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட தங்கள் மகனின் உடலை சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, சவ அடக்கத்திற்கு சில மணி நேரமே எஞ்சியிருக்கும் நேரத்தில் "இறந்த நபர் உங்கள் மகன் அல்ல" என்று சிறைச்சாலையிலிருந்து வந்த அவசர அழைப்பினால் ஓர் இந்திய குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது.
அப்படியென்றால் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, தாங்கி கொள்ள முடியாத துக்கத்தினால் தாங்கள் அழுது புரண்டு, பார்த்து பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்த அந்த பிரேதம் யாருடையது என்று அந்த இந்திய குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை தம்பின், தாமான் டேசா பெர்மாயில் சந்திரன் என்பவரின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது. தங்கள் மகன் இறந்து விட்டதாகவும், சடலத்தை கோருவதற்கு சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வரும்படி சிறைச்சாலை நிர்வாகம் தங்களை கேட்டுக்கொண்டதாக சந்திரன் தெரிவித்தார்.
மிகுந்த துயரத்துடன் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு சென்று சடலத்தை கோர முற்பட்ட போது, தங்கள் மகன் மொட்டை அடிக்கப்பட்டு, முகத்தில் பல தையல்கள் போடப்பட்டு இருந்ததால் மகனின் உருவத்தை சரியாக அடையாளம் காண முடியாத நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதாக சந்திரன் குறிப்பிட்டார்.
ஆனால், பாரத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே சடலத்தை கோர முடியும் என்று சிறைச்சாலை நிர்வாகம் உத்தரவிட்டதால் அவ்வாறு செய்த பின்னர் சடலத்தை கோரியதாக சந்திரன் தெரிவித்தார்.
மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சவ அடக்கத்திற்கான இறுதி சடங்கு நடைபெற மூன்று, நான்கு மணி நேரம் இருக்கும் நிலையில் வீடியோ அழைப்பின் வாயிலாக தங்கள் குடும்பத்தினருடன் அவசர அழைப்பை விடுத்த சுங்கை பூலோ சிறைச்சாலை நிர்வாகம் , தங்களின் 19 வயது மகன் உயிருடன் இருப்பதாக அறிவித்தது இது உண்மையா, பொய்யா என்பதை இப்போதுகூட தம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று 45 வயது சந்திரன் தெரிவித்தார். அப்படியொன்றால், துயரத்தை தாங்கி கொள்ள முடியாமல் மகனை கட்டிப்பிடித்து அழுத அந்த சடலம் யாருடையது என்று சந்திரன் வினவுகிறார்.








