போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு முன்னாள் விமானப்படை அதிகாரிகளின் தண்டனையை கோல திரங்காணு உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
அவர்களின் வழக்கை விசாரித்த இராணுவ நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து, சுல்சாம்ரி ஹருன் மற்றும் நோரிசம் அப்துல்லா ஆகியோருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி, அவர்கள் ஓய்வு பெற திட்டமிடப்பட்ட தேதி வரையில், அவர்களுக்கு சேர வேண்டிய அனைத்து ஊதியங்கள் மற்றும் சலுகைகளோடு, அவர்களின் முறையான ஓய்வூதிய சலுகைகளையும் வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஆம்பெட்டமைன் என்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாக சோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பர் 29-ஆம் தேதி, சுல்சாம்ரி மற்றும் நோரிசம் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது..
கடந்த 2024-ஆம் ஆண்டு, பிப்ரவரி 6-ஆம் தேதி, அவர்களின் நான்கு மாத சிறைத்தண்டனையானது உறுதி செய்யப்பட்டது,
மேலும் இரு அதிகாரிகளும் அதே ஆண்டு மே 1-ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இராணுவ நீதிமன்ற முடிவை எதிர்த்து அவர்கள் கடந்த மாதம் நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பங்களை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








