ஜோகூர் மாநிலத் தேர்தலுக்காக மொத்தம் 24,677 தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இத்ருஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள தேர்தல் அதிகாரிகளால் இன்று தபால் வாக்குகள் வழங்கும் பணி நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரிகள், போலீசார், ராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கிய ' பாரம் 1ஏ' பிரிவினருக்கு 23,288 வாக்குச் சீட்டுகளும், வெளிநாட்டில் வாழும் மலேசியர்களுக்கான 'பாரம் 1பி' பிரிவினருக்கு 1,044 வாக்குச் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 345 வாக்குச் சீட்டுகள் பல்வேறு முகவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட தபால் வாக்குகள், தேர்தல் நடைபெறும் இந்த ஜுலை 11 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளைச் சென்றடைய வேண்டும் என எஸ்பிஆர் நினைவூட்டியுள்ளது. மேலும், தபால் வாக்குகளைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








