இந்து ஆலய கும்பாபிஷேக நடைமுறைகள் மற்றும் செலவினங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் வலியுறுத்தியுள்ளார்.
ஆலயங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்கும் நோக்கில், பேராக் மாநில அரசின் முன்னெடுப்பில் ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் கேமரன் மலையில் சிறப்பு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பேசிய டத்தோ சிவநேசன், ஆலயங்கள் சமர்ப்பிக்கும் கும்பாபிஷேகச் செலவின மதிப்பீடுகள் மிக அதிகமாக இருப்பதும், பங்கேற்கும் அர்ச்சகர்களின் எண்ணிக்கையில் ஒரே மாதிரியான நடைமுறை இல்லாததும் தேவையற்ற குழப்பத்தையும் செலவையும் ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதனால்தான், முதன்முறையாக இந்த இருநாள் கருத்தரங்கை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட டத்தோ சிவநேசன், இது எதிர்காலத்தில் நியாயமான நடைமுறையை உருவாக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் டத்தோ சிவநேசனின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.













