சக நாட்டுப் பிரஜையைக் கடத்திப் பிணைத்தொகை கோரிய வழக்கில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த இரண்டு வங்காளதேச கட்டுமானத் தொழிலாளர்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம், 42 வயது பாரூக் சியாஹபுதீன், 40 வயது பேகம் ரபெசாலி, ஆகியோருக்கு விதித்த 30 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிபதி அஸ்மி அரிஃபின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ரத்து செய்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு கெடா, கூலிம் பேருந்து நிலையத்தில் சைஃபுல் இஸ்லாம் என்ற நபர் கடத்தப்பட்டு, ஐந்து நாட்கள் அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நபர், அந்த வீட்டில் சுதந்திரமாக நடமாடியதாகவும், அவரது தந்தையிடம் பணம் பறிப்பதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்றும் சாட்சியங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் ஆர்.எஸ்.என். ராயர் வாதாடினார். இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம் இருவரையும் முழுமையாக விடுவிக்க உத்தரவிட்டது.








