சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இன்று அதிகாலை போலீஸில் சரணடைந்த நான்கு பேர், இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை நிறைவு செய்ய , தங்களுக்கு நான்கு நாட்கள் அவகாசம் தேவை என போலீசார் விண்ணப்பித்ததை அடுத்து, புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்ற நீதிபதி ரோஷயாதி ராடெல்லா தடுப்புக் காவல் உத்தரவை வழங்கினார்.
முன்னதாக, 20 முதல் 30 வயதிற்குட்பட்ட இரண்டு பொறியாளர்கள், ஒரு தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வேன் ஓட்டுநர் ஒருவர் ஆகிய நான்கு பேரும் இன்று காலை 8.35 மணியளவில், போலீஸ் வாகனம் ஒன்றில், புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் நால்வரும் கைவிலங்கிடப்பட்டு ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தடுப்புக் காவல் உடையில் இருந்தனர்.
அதேவேளையில், நால்வரும் கைது செய்யப்படுவதற்கு முன்பு இன்று காலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்ததாகக் கூறப்படுகின்றது.
இதனிடையே, தாக்குதல் தொடர்பான காணொளி காட்சிகளை அவர்கள் நீதிபதியின் பார்வைக்கு வைத்ததாக அவர்களின் வழக்கறிஞர் வி. பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், இவ்வழக்கில் சகோதரர்கள் இருவர் தனித்தனியாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, இத்தாக்குதல் தொடர்பாக ஜம்ரியிடமிருந்து அறிக்கை பெற்றதை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.








