உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலில், நாட்டின் வளங்களைப் பாதுகாக்கவும் திறம்பட நிர்வகிக்கவும் சிக்கனமான பொதுச் செலவினம் அவசியம் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தபோது மாமன்னர் இதனைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் நிதிநிலையை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து மாமன்னருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மக்களின் வாழ்க்கைச் செலவினப் பிரச்சனைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் பிரதமரும் அதிகாரிகளும் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
நாட்டின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து மாமன்னர் தனது ஆழ்ந்த அக்கறையை இந்தச் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.








