மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைவர் அசாம் பாக்கிக்கு எதிராக, வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி, டத்தாரான் மெர்டேகாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள போராட்டம் குறித்து, போலீசாருக்கு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தங்காப் அசாம் பாக்கி இயக்கத்தினர் இந்த போராட்டம் தொடர்பாக போலீசாருக்கு முன் அறிவிப்பு தெரிவிக்கவில்லை என Dang Wangi மாவட்ட போலீஸ் தலைவர் சசாலி ஆடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுக்கூட்டங்களை பயன்படுத்தி அமைதியை குலைக்கும் அல்லது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டின் அமைதியான ஒன்று கூடல் சட்டம், பிரிவு 9-இன் படி, பொதுக்கூட்டத்தை நடத்தும் ஏற்பாட்டாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் தலைவருக்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்.
இதற்கிடையில், இந்த விதியை திருத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த திருத்தம் தொடர்பான மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








